பறிமுதல் லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளருக்கு அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி

மதுரை: மணல் கடத்தியதாக பறிமுதல் செய்த லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளருக்கு அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக நெல்லையைச் சேர்ந்த அடைக்கலம் என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எனக்கு சொந்தமான லாரியை மணல் கடத்தியதாக கடந்த 2014-ம் ஆண்டில் போலீஸார் பறிமுதல் செய்தனர். லாரியை விடுவிக்கக் உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன். என் மனுவை விசாரித்த நீதிமன்றம் என்னிடம் அபராதமாக ரூ.10 ஆயிரம் வாங்கிக்கொண்டு லாரியை விடுவிக்க 2015-ல் உத்தரவிட்டது. அதன்படி அபராதத் தொகையை செலுத்தினேன்.

ஆனால், ரூ.50 லட்சம் கொடுத்தால் தான் லாரியை விடுவிப்போம் என பாளையங்கோட்டை காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் சபாபதி தெரிவித்தார். நான் லஞ்சம் கொடுக்காததால் லாரியை தரவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி முரளிசங்கர் இன்று பிறப்பித்த உத்தரவில், “நீதிமன்ற உத்தரவிட்டபடி மனுதாரர் அபராத தொகையை செலுத்திய பின்பும், அவரது வாகனத்தை திருப்ப வழங்காதது அதிர்ச்சியாக உள்ளது. இதனால் காவல் ஆய்வாளர் சபாபதிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். தவறினால் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு நவ. 24-க்குள் காவல் ஆய்வாளர் வழங்க வேண்டும். மனுதாரரிடம் வாகனத்தை ஒப்படைக்க நெல்லை மாவட்ட 3வது நீதித்துறை நடுவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.