கிழக்கு கடற்கரையை பாதுகாக்க கோரிய மனு: மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாட்டின் 1,200 கிலோ மீட்டர் நீள கடற்கரையில் பல்வேறு காரணங்களால் கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவ சமுதாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி, மீனவர் நலச் சங்கம் சார்பில், செல்வராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “கடல் அலை, கடல் உள்வாங்குவது, நீரோட்ட மாற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்படுவதாகவும், தமிழகத்தில் 50 கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், கடல் அரிப்பை தடுப்பதற்கான திட்டத்தை அமல்படுத்தும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தமிழகத்தில் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.

இந்நிலையில் இன்று, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ண குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து மத்திய – மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.