சிக்கலில் ரூபி மனோகரன்; வலை வீசிய முக்கிய கட்சி!

நாடாளுமன்ற தேர்தலுக்கு 16 மாதங்கள் உள்ள நிலையில் பாஜக தொடங்கி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளன.

இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தேர்தலில்

கட்சியின் செயல்பாடு குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் என பலர் வந்திருந்தனர்.

அப்போது திடீரென திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை நீக்க கோரி நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் அலுவலகம் முன்பாக திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அங்கு விரைந்து வந்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறி அமைதிப்படுத்துவதற்கு முயன்றார்.

இதன் தொடர்ச்சியாக ரூபி மனோகரனிடமும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் உடன்பாடு ஏற்படாததால் திடீரென ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் கே.எஸ். அழகிரியின் காரை மறித்தனர்.

இதனால் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் களக்காடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஸ்வா, நெல்லை மாவட்ட நிர்வாகிகள் டேனியல், ராபர்ட் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்து தகராறை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதே சமயம், இந்த மோதலுக்கு காங்கிரஸ் எம்எல்ஏவான ரூபி மனோகரன் தான் காரணம் என, காங்கிரஸ் கட்சியில் பரவலாக பேசப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் ரூபி மனோகரனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என, கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் பரவி வருவதால் காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, கட்சியின் பொருளாளரும் எம்எல்ஏவுமான ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில் வருகிற 24ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற இருக்கும் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் நேரில் ஆஜராகி நவம்பர் 15ம் தேதி நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே காங்கிரஸ் அனுப்பி உள்ள நோட்டிஸ் காரணமாக அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் இருக்கும் ரூபி மனோகரன் தங்களது பக்கம் இழுக்கும் வகையில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலை வீசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.