கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். ஆனால், அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும், ஜெயலலிதாவின் மரணமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதனால், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் குழு அமைத்து கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற தீவிர விசாரணைக்கு பிறகு, ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போது இருந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போன்றோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையின் படி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ரகசியம் இருப்பதாகவும், வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, முழுமையாகவும் நியாயமாகவும் விசாரணை நடத்த வேண்டும்.
இந்த வழக்கில், தமிழக அரசின் உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், மாநில காவல்துறையை விசாரணை செய்ய நியமிப்பது நியாயமானதாக இருக்காது என்பாத்தாலும், உண்மை நீர்த்துப்போகும் என்பதாலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த மனுவை விசாரணை செய்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு மனு அளிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கு மனு அளிக்காமல் தாக்கல் செய்யபட்டது என்பதால், விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்து இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.