தமிழகத்தில், கடந்த மாதம் 26-ந்தேதியில் இருந்து போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் கூடுதல் அபராதம் விதிக்கும் நடைமுறை ஆரம்பித்து, தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஒரு வழிப்பாதையில் பயணம் செய்பவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக விதிக்கப்பட்டு வந்த அபராத தொகை கடந்த மாதத்திலிருந்த்து, பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.100 ஆக இருந்த அபராத தொகை தற்போது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் முக்கிய சந்திப்புகளில் நின்றபடி அபராதம் வசூலித்து வருகிறார்கள். அதே சமயம் கண்காணிப்புக் கேமராக்கள் மூலமும் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக ‘டிராபிக் ரெகுலேசன் அப்சர்வேஷன் மண்டலம்’ என்ற பெயரில் ட்ரோன் கேமராக்களே விதிமீறலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கம்ப்யூட்டர் மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
அதன்படி, சென்னை அண்ணாநகர் பகுதியில் சுமார் அறுபது கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வேப்பேரி போக்குவரத்து போலீஸ் எல்லைக்குட்பட்ட புரசைவாக்கத்திலும், ஒரு கேமரா அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதிகளில் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராத தொகை ஆன்லைன் மூலமே விதிக்கப்பட்டு வருகிறது.