மனைவி விற்ற குழந்தையை போராடி மீட்ட கணவன்

ஒசூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெய்நகரை சேர்ந்தவர் பெயிண்டர் பாலாமணி. இவர் கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அருகே உள்ள பல்லூர் பகுதியை சேர்ந்த மம்தா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை ஊனமுற்றதாக இருந்தது. அதன் பின்னர் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தைக்கு சுமந்த் என்று பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் பாலாமணிக்கும் அவரது மனைவி மம்தாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவனை பிரிந்த மம்தா தனது இரண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீடான ஓசூர் அருகே உள்ள பல்லூர் பகுதிக்கு வந்துள்ளார். அதன்பின் அவர் தாய் வீட்டிலேயே தங்கி விட்டார். இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் பாலாமணி தனது குழந்தைகளை பார்ப்பதற்காக பல்லூர் சென்றுள்ளார்.

அப்போது மனைவியுடன் மகள் மட்டுமே இருந்துள்ளார். மகன் இல்லாததால் இதுபற்றி மனைவியுடன் கேட்டுள்ளார். அதற்கு மம்தா சரியான பதில் கூறாமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த மம்தா, மகளை கணவர் பாலாமணியிடம் ஒப்படைத்து விட்டு மாயமானார். மனைவியிடம் இருந்து மகளை வாங்கிய பாலாமணி ஜெயநகர் பகுதிக்கு அழைத்து சென்று வளர்த்து வந்துள்ளார். மேலும், தனது மகன் எங்கே இருக்கிறான் என அவர் பெங்களூர் மற்றும்  அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து தேடி வந்துள்ளார். இதனிடையே மகன் சுமந்த்தை மனைவி ஒருவருக்கு பணத்திற்கு ஆசைப்பட்டு விற்பனை செய்ததும், தற்போது சுமந்த் ஈரோடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருப்பதாகவும் பாலாமணிக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து பாலாமணி, ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் பாஸ்கர் ராவ் என்பவர் உதவியுடன் கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் தனது மகனை கண்டுபிடித்து கொடுக்குமாறு புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அத்திப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் ஈரோடு சென்று பாலாமணி – மம்தா தம்பதியரின் மகன் சுமந்த்தை மீட்டுள்ளனர். அவனை வளர்த்த பெற்றோர் அவனுக்கு செல்வமணி என பெயரிட்டு நன்றாக வளர்த்து வந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த சிறுவன் மற்றும் அவனை வளர்த்தவர்கள் மற்றும் சிறுவனின் பெற்றோரான பாலாமணி, மம்தா ஆகியோரை அத்திப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். சிறுவனை வளர்த்தவர்கள் தாங்களே அவனை நன்றாக வளர்த்துக் கொள்கிறோம் என பாலாமணி மற்றும் மம்தா ஆகியோரின் கால்களில் விழுந்து கெஞ்சி கேட்டுள்ளனர்.

ஆனால் பாலாமணியோ ஊனமுற்ற தனது மகளுக்கு சகோதரன் தேவை, அதனால் எனக்கு கண்டிப்பாக சுமந்த் வேண்டும் என விடாப்பிடியாக இருந்து மகனை கொடுக்க மறுத்துள்ளார். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின் சிறுவனை வளர்த்தவர்கள் அவனை பெற்றோரிடம் விட்டு விட்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றனர். இதனையடுத்து பாலாமணி தனது மகளையும் மகனையும் தான் நன்றாக வளர்த்து படிக்க வைப்பேன் என போலீசாரிடம் கூறி அழைத்து சென்றார். அவருடைய மனைவி மம்தா தனக்கு கணவனும் வேண்டாம், பிள்ளைகளும் வேண்டாம் எனக்கூறி அங்கிருந்து சென்றுள்ளார். மகன் கிடைத்த சந்தோஷத்தில் அவனை கட்டித் தழுவிய பாலாமணி மகனையும் மகளையும் அங்கிருந்து அழைத்து சென்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.