ஒரு தாக்குதலைக்கூட பல தாக்குதல்களாக கருத வேண்டும்!: தீவிரவாதத்தை வேரோடு பிடுங்கும்வரை நமக்கு ஓய்வு என்பதே கிடையாது.. பிரதமர் மோடி சூளுரை..!!

டெல்லி: தீவிரவாதத்தை வேரோடு பிடிங்கி அழிக்கும் வரை நமக்கு ஓய்வு என்பதே கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். டெல்லியில் தொடங்கியுள்ள தீவிரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்கும் 3வது அமைச்சர்கள் மாநாட்டில் துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். நீண்ட நாட்களுக்கு முன்பு நமது நாடு பயங்கரவாதத்தின் கோரத்தை சந்தித்து கொண்டிருந்ததாக தெரிவித்தார். பல பத்து ஆண்டுகளாக இந்தியாவை தீவிரவாதம் பல வடிவங்களிலும், பல பெயர்களையும் தாக்க முயற்சித்தது என்றும் கூறினார். ஒரு தாக்குதலை கூட ஒன்றுக்கு மேற்பட்ட தாக்குதல்களாக நான் கருதுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அனைத்து தீவிரவாத நடவடிக்கைகளும் சமமான மற்றும் கடுமையான நடவடிக்கைக்கு பொருந்தக்கூடியவை என்று மோடி சுட்டிக்காட்டினார். பயங்கரவாதம் நமது வீட்டுக்கு வரும்வரை காத்திருக்கக்கூடாது. தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்யும் வேரை கண்டறிந்து அதை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆயிரக்கணக்கான உயிர்களை தீவிரவாதத்துக்கு இழந்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, தீவிரவாதம் வேரறுக்கப்படும் வரை நான் ஓயக்கூடாது என்றார். எப்போதும் தீவிரவாதம் அச்சுறுத்தல் இருக்கும் பகுதியில் தொழில் முதலீடு செய்ய யாரும் விரும்புவதில்லை என்பதால் அதை வேருடன் பிடுங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.