கண்கலங்கிய இயக்குனருக்கு ஆறுதல் சொன்ன சன்னி லியோன்

ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் படங்களை இயக்கிய டி.எம் ஜெயமுருகன், இசையமைத்து, தயாரித்து இயக்கி வரும் படம் 'தீ இவன்'. கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன்.ஜெ, சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,'சேதுக் அபிதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

படப்பிடிப்பு இடைவெளியில் பத்திரிகையாளர்களை சந்தித்த சன்னி லியோன் கூறியதாவது: குறுகிய இடைவெளியில் மீண்டும் சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னைக்கு வருவதற்கு முன்பு ஒருவித அயர்ச்சியில் இருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் பாடலுக்கு ஆடியபோது ரொம்ப கூலாகிட்டேன். டான்ஸ் மாஸ்டர் மிக அழகாக நடன அசைவுகளை அமைத்துக்கொடுத்ததால் ரொம்ப எளிதாகவும் நன்றாகவும் நடனமாட முடிந்தது. நான் இந்த பாடல் காட்சியில் ஏன் நடித்தேன் என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது தெரிந்துகொள்வீர்கள். தயாரிப்பாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நன்றிகள். என்றார்.

படத்தின் இயக்குனர் டி.எம். ஜெயமுருகன் பேசியதாவது: கார்த்திக்கின் முழு பரிமானத்தையும் 'தீ இவன்' படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். ஒரு இடவெளிக்கு பிறகு இப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன். நமது தமிழ்ச்சமூகம் கலை, கலாச்சாரம், உறவுகளோடு கட்டமைக்கப்பட்டது. உலக நாடுகளே நமது கலாச்சாரத்தை வியந்து பார்க்கிறார்கள். பின்பற்றவும் செய்கிறார்கள் அப்படிப்பட்ட நமது கலாச்சாரம் இன்று சீரழிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற போக்கு வருங்காலத்தில் இன்றைய தலைமுறையினரின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி படத்தை எடுத்துள்ளேன்.

இதில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். சன்னி லியோனை மும்பையில் சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னபோது, “தமிழ் கலாச்சாரத்தை காப்பது போன்ற கதையுள்ள இப்படத்தில் நான் இடம்பெறுவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்றார். இப்படத்தின் பட்ஜெட் என்ன? நடிகர்கள் யார் என்றெல்லாம் பார்க்காமல் கதைக்காக அவர் ஒத்துக்கொண்டது அவரது நல்ல மனசை காட்டியது.

இப்போதுள்ள தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்த பிறகு என்னமாதிரியெல்லாம் சேட்டை பண்ணுகிறார்கள், தயாரிப்பாளர்கள் எவ்வளவு கந்தலாகி போகிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். அப்படியொரு சூழ்நிலையில் எந்த ஆடம்பரமும் பந்தாவும் இல்லாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து சன்னிலியோன் நடித்துக் கொடுத்ததற்கு நன்றி சொல்கிறேன்.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே இயக்குனர் ஜெயமுருகன் உணர்ச்சி மிகுதியால் கண்கலங்கினார். அவரை சன்னி லியோன் ஆறுதல் படுத்தினார். இது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை நெகிழ வைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.