"சிறையில் 10 கிலோ எடை குறைந்துவிட்டேன், கண்பார்வையும்..!"- சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத்

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத் பணமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தன்னுடைய சிறை அனுபம் குறித்து பேட்டியளித்த அவர், “என்னைக் கைதுசெய்து 15 நாள்கள் தனிமை சிறையில் அடைத்தனர். 15 நாள்களாக சூரியவெளிச்சத்தைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. சிறைக்குள் இருந்த விளக்குகளால் என் கண்பார்வை பாதிக்கப்பட்டது. இப்போது என்னால் சரியாக படிக்கக்கூட முடியவில்லை. சரியாக் காதுகூட கேட்பதில்லை. ஞாபக சக்தியும் குறைந்து வருகிறது.

நான் ஒரு போர்க்குற்றவாளி. நான் அவர்களிடம் (பா.ஜ.க) சரணடைந்திருந்தால் அல்லது பேசாமல் இருந்திருந்தால், கைதுசெய்யப்பட்டிருக்கமாட்டேன். நாங்கள் அவர்களுடன் போரிடுவதாக அரசு நினைக்கிறது. முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்னும் சிறையில்தான் இருக்கிறார். அவர் உடல்நிலை மோசமாக இருக்கிறது. எதிர்ப்பவர்களை மட்டும்தான் இந்த அரசு கைதுசெய்யுமா? பால் தாக்கரே, அவர் குடும்பத்தால்தான் நான் இந்த அளவுக்கு இருக்கிறேன்.

சஞ்சய் ராவுத்

கட்சியைவிட்டுச் செல்ல விரும்புபவர்கள் செல்லலாம். மகாராஷ்டிரா மக்கள் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவுடன்தான் இருக்கின்றனர். சுயநலத்துக்காக எம்.எல்.ஏ-க்களும், தலைவர்களும்தான் கட்சியிலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.

கட்சியிலிருந்து வெளியேறியவர்கள், சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். மகாராஷ்டிராவில் ஒரு சிவசேனாதான் இருக்கிறது. சிலர் சிவசேனாவை அழிக்க நினைக்கின்றனர். அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிட்டிருந்தால் சிவசேனா ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். வீர் சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்து எதிர்காலத்தில் மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தும். ராகுல் காந்தியின் கருத்தால் மாநில காங்கிரஸ் கட்சியினர்கூட தர்ம சங்கடத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

சாவர்க்கரின் கொள்கையை பால் தாக்கரே பின்பற்றினார். எனவே காங்கிரஸ் இது போன்ற விவகாரத்தில் தனது கருத்தை தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும். வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராமர் கோயில், பொது சிவில் சட்டம், 370-வது சட்டப்பிரிவு போன்றவை பயன்படுத்தப்படவில்லை. சாவர்க்கர் விவகாரத்திலும் அதேநிலையைத்தான் பின்பற்றவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.