மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பெட்ரோல் குண்டு வீசி வெட்டிக்கொலை!

காஞ்சிபுரம்: சென்னை புறநகர் பகுதியான மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் மர்ம கும்பலால் பெட்ரோல் குண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரத்தை அடுத்து உள்ளது மாடம்பாக்கம். இது காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாடம்பாக்கம் பகுதியாகும். இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் 45வயதான வெங்கடேசன். இவர் நேற்று இரவு மணிமங்கலம் அருகே பெட்ரோல் குண்டு வீசி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், வெங்கடேசனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை கும்பலை தேடி வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பான விசாரணையில், நேற்று   இரவு வெங்கடேசன்  தொலைபேசிக்கு அழைப்பு வந்ததாகவும்,  இதையடுத்து அவேர் ராகவேந்திரா நகர் பாலம் அருகே சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், வெங்கடேசன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த வெங்கடேசனை கத்தி, வீச்சுஅரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால்  தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் 6 பேர் கும்பல் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் காரணமாக மாடம்பாக்கம் ஊராட்சியில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.