அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் பதில் மனு!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில், இடைக்கால பொதுச்செயலாளரான  இபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, ஓபிஎஸ் மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், எடப்பாடி தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, ஓ.பன்னீர்செல்லம் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று. தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்பவும், கட்சியின் நலன் கருதியும் ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட்டது. கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது. எனவே, அதன் முடிவே இறுதியானது.

கட்சியின் செயல்பாடுகளில் முடக்கம் ஏற்பட்டதால்தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதுவே, பொதுக்குழுவிலும் பிரதிபலித்தது. கட்சி பொதுக்குழு கூட்டப்படுவதற்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டது”. ஆனால், அவர் பொதுக்குழுவில் கலந்துகொள்ளாமல், அதிமுக கட்சி அலுவலகத்தை சூறையாடி, கட்சியின் விதிகளை மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். எனவே, அவர் எந்த நிவாரணமும் பெறத் தகுதி இல்லாதவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.