திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வாரவிழா நடைபெற்றது. இந்த விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
“தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தான் கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது. தற்போது ஆறாயிரத்து ஐநூறு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலேயே இரண்டாவது இடமாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய உள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும் என்றும், குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் அட்டை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
அந்த ரைவிப்பின் படி, இதுவரை மாநிலம் முழுவதும் சுமார் 13 லட்சத்து 50 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக விண்ணப்பித்து உள்ளவர்களில் தகுதியான அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்படும். தற்போது நியாய விலகி கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதில், கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் முதியவர்களின் விரல் ரேகை சரியாக பதிவு ஆகாமல் இருப்பதால், பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் கருவிழி பதிவு மூலம் நியாய விலை பொருட்கள் வழங்கும் முறை கூடிய விரைவில் அமலுக்கு வர உள்ளது.
இதன் முன்னோட்டமாக சென்னையில் உள்ள நியாய விலைக்கு கடைகளில் இது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் நியாய விலைக் கடைக்கு வர முடியாதவர்கள் அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால், பிற குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை வாங்கி கொள்ளலாம்” என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.