அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் குடும்பத்துடன் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். அதன் பிறகு தனது குடும்பத்துடன் மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் அதிமுக இன்று சின்னம் இல்லாமல், கட்சி இல்லாமல், நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கிறது. எனவே, அந்தக் கட்சியைப் பற்றி பேசுவது தேவையற்றது என்று நினைக்கிறேன்.தேர்தல் நேரத்தில் அதுகுறித்து பேசிக் கொள்ளலாம்.
பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்துள்ள நீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த வழக்கின் நிலை என்னவென்று எனக்கு தெரியவில்லை” என்றார்.
அப்போது மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தினகரன்,மத்தியில் பிரதமர் வேட்பாளரை சொல்ல வேண்டும் என்பதற்கான கூட்டணியில் அமமுகவும் இடம்பெறும். நிச்சயம் நல்ல கூட்டணி அமையும். வலுவான கூட்டணியாக அமையும். பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.