தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அரசு கேபிள் டிவி சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென் பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு நிர்வாகி ராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார் .
இந்த நிலையில், அரசு கேபிள் டிவி சேவை துண்டிப்பு தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் முறையீடு செய்யப்பட்டது. அரசு கேபிள் டிவி தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனமான காஸ்பல் இன்டர்நேஷனல் நிறுவனமும், அரசு கேபிள் டிவி நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கட்டணம் செலுத்துவது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் மத்தியஸ்தர் மூலமே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும், அதையும் மீறி கேபிள் சேவை துண்டித்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இக்கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, கட்டணம் தரவில்லை என்பதற்காக, கேபிள் சேவையை துண்டிக்க கூடாது என்றும், மத்தியஸ்தர் மூலமாக பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மத்தியஸ்தர் மூலம் 90 நாட்களுக்குள் இது குறித்து தீர்வு காண வேண்டும் என கூறிய நீதிபதி, அரசுக்கு கேபிள் டிவி சேவையை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.