கலை, அறிவியல் படிப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகம்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு அடுத்த கல்விஆண்டு (2023-24) முதல் புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

உயர்கல்வி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக, அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, துறை செயலர் தா.கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பல்கலைக்கழகங்கள் மேம்பாடு, புதிய பாடத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, உயர்கல்வித் துறை வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், துணைவேந்தர்கள் பங்கேற்க ஆய்வுக் கூட்டத்தில், புதிய பாடத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, பொறியியல் கல்வியைப் போல, கலை, அறிவியல் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தையும், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து வடிவமைத்து வருகிறோம். தமிழக மாணவர்கள் திறனை மேம்படுத்தி, அவர்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் புதிய பாடத் திட்டம் அமையும்.

கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. அந்த பாடப்பிரிவுகளில் கணினி அறிவியல்மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ள பாடங்களையும் இணைத்து, உயர்கல்வி மன்றம் மூலமாக புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வரைவு தற்போது அனைத்து துணைவேந்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதில் மாற்றங்கள் இருந்தால், பரிந்துரைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய பாடத் திட்டத்தை அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம் கட்டாயம்: புதிய பாடத் திட்டத்தில், கல்லூரி முதலாம் ஆண்டில் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றை கட்டாயப் பாடங்களாக படிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மாணவர்கள் எந்த பாடப் பிரிவில் படித்தாலும், அவர்களுக்கு வேலைக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும். மேலும், பல்கலைக்கழகங்களில் முக்கிய தலைவர்கள் குறித்த பட்டயப் படிப்புகள் கொண்டு வரப்பட உள்ளன. இதுதவிர, ஆராய்ச்சி படிப்புக்காக தமிழக அரசு ஏற்கெனவே ரூ.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

பல்கலைக்கழகங்களைப்போல கல்லூரிகளிலும் தேவைக்கேற்ப புதிய பாடப் பிரிவுகள் தொடங்கஅனுமதி தரப்படும். மாநில அரசின்பல்கலைக்கழகங்களில் உள்ளகாலி பணியிடங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களின் நிதி நிலைமையை மேம்படுத்தி, அனைத்து சிக்கல்களும் சரிசெய்யப்படும். பச்சையப்பன் கல்லூரி விவகாரம் தொடர்பாக, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.