தோசை சாப்பிட நிச்சயம் தமிழகம் வருவேன்: மலேசியாவின் புதிய பிரதமர் ருசிகர பேட்டி!



மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள அன்வார் இப்ராகிம் தோசை சாப்பிடுவதற்காக தமிழகத்திற்கு நிச்சயம் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.


மலேசியாவின் புதிய பிரதமர்

மலேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான 15 வது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கான 112 இடங்கள் கிடைக்காத நிலையில் ஐக்கிய மலாய் கட்சியின் ஆதரவுடன் அன்வார் இப்ராகிம் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

சீர்திருத்தவாத தலைவர் அன்வார் இப்ராகிமை புதிய பிரதமராக மலேசிய மன்னர் அறிவித்ததை தொடர்ந்து, நாட்டின் நிச்சயமற்ற நிலை முடிவு கொண்டு வரப்பட்டு இன்று மாலை நடைபெற்ற விழாவில் அன்வார் இப்ராகிம் நாட்டின் 10வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த தேர்தலில் மலாய் இனத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசிய கூட்டணி 72 இடங்களை கைப்பற்றியது, அன்வர் இப்ராகிம் தலைமையிலான கட்சி 82 இடங்களை கைப்பற்றியது மற்றும் பான்-மலேசிய இஸ்லாமிய கட்சி 49 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக மலேசியாவில் உருவெடுத்துள்ளது.

 தோசை சாப்பிட தமிழகம் வருவேன்

மலேசியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்வார் இப்ராகிம் தமிழகத்தை சேர்ந்த தினத்தந்தி செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தோசை சாப்பிடுவதற்காக நிச்சயம் தமிழகம் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய சுற்றுப்பயணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேலும் அதில் தான் காஷ்மீரை தவிர இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று இருப்பதாகவும், தோசை சாப்பிடுவதற்கு நிச்சயம் தமிழகம் வருவேன் என்றும் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான் அமைச்சராக இந்தியாவிற்கு வந்த போது தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ஐ சந்தித்ததாகவும், அவர் அளித்த விருந்து அருமையாக இருந்தாகவும் நினைவு கூர்ந்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.