இந்திய பங்குச் சந்தையில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி ஆகியவை நேற்று வரலாறு காணாத உச்சத்தை எட்டின.
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, மெதுவான வட்டி உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதை அடுத்து, இந்திய சந்தைகள் உயர்வைக் கண்டன. அமெரிக்க பங்குச் சந்தை நிலவரம், பங்கு முதலீட்டுக்கு சாதகமாக அமைந்ததும், பத்திரங்கள் மீதான வருவாய் மற்றும் டாலர் மதிப்பு ஆகியவை குறைந்ததும், இந்திய சந்தைகள் உயர கூடுதல் காரணங்களாக அமைந்தன.
அத்துடன், நாட்டின் பொருளாதார தரவுகள் மேம்பட்டு வருவதை அடுத்து, இந்தியா வலுவான பொருளாதார மீட்சியை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் சந்தை உயர்வுக்கு காரணமாக அமைந்தது.
இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி ஆகியவை நேற்று வரலாற்று உச்சத்தை தொட்டன. இந்த இரண்டு குறியீட்டு எண்களும் தலா 1 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தன.