ஜல்லிக்கட்டு நமது கலாச்சாரம், அவசியமானது : மதுரையில் படம் பார்த்த சசிகுமார் பேட்டி

ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார், பார்வதி அருண் நடித்துள்ள ‛காரி' படம் இன்று(நவ., 25) வெளியானது. இந்த படத்தின் முதல்காட்சியை மதுரையில் ஜல்லிக்கட்டு வீரர்களுடன் பார்க்க போவதாக நாயகன் சசிகுமார் கூறியிருந்தார். அதன்படி மதுரையில் சினிப்பிரியா தியேட்டரில் நிஜ ஜல்லிக்கட்டு வீரர்களுடன் படம் பார்த்தார் சசிகுமார். அப்போது ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்திருந்தனர். அவற்றை சசிகுமார் வழிபட்டு பின் படம் பார்த்தார்.

படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சசிகுமார், ‛‛மதுரையில் மாடுபிடி வீரர்களுடன் காரி படத்தை பார்த்தது மகிழ்ச்சி. படத்திற்கு ரசிகர்கள் தந்த வரவேற்பு உற்சாகத்தை தந்தது. இது ஜல்லிக்கட்டு தொடர்புடைய படம். இந்த மாதிரி ஒரு படம் பண்ண ஆசை இருந்தது. அப்போது என்னால் பண்ண முடியவில்லை. இப்போது ஹேமந்த் அருமையாக எடுத்துள்ளார். நான் எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த வெற்றி அவருக்கு தான் போய் சேரும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்மையாகவே ஜல்லிக்கட்டை படமாக்கினோம். பொங்கல் வர உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இந்த படம் பூஸ்ட் மாதிரி இருக்கும். வழக்கு எல்லாவற்றையும் தாண்டி ஜல்லிக்கட்டில் நாம் வெற்றி பெறுவோம், எனக்கு மட்டுமல்ல ஜல்லிக்கட்டை உயிராக நேசிக்கும் எல்லோருக்கும் தான். கிராமத்து கதையை எப்போதும் விட மாட்டேன். என் மண், எனது ஊரை பற்றி நான் தான் சொல்வேன். அதை விட மாட்டேன். அதேசமயம் மற்ற படங்களின் கதை வந்தாலும் பண்ணுவேன்.

ஜல்லிக்கட்டு நமது கலாச்சாரம், அவசியமானது. அதை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. மாடுகளை தெய்வமாக கொண்டாடுகிறார்கள். இதை யாரும் தப்பாக சொல்லாதீர்கள். இந்த படத்திலும் அதை பதிவு செய்துள்ளோம். ஜல்லிக்கட்டின் அவசியத்தை பேசி உள்ளோம். அடுத்து மார்ச் மாதம் மீண்டும் இயக்கத்திற்கு திரும்புகிறேன். படப்பிடிப்பு நடக்க உள்ளது. தியேட்டருக்கு மீண்டும் மக்கள் வருவது மகிழ்ச்சி'' என்றார்.

இயக்குனர் ஹேமந்த் கூறுகையில், ‛‛மதுரையில் படம் பார்த்தது திருவிழா போன்று இருந்தது. இந்த படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைத்ததாக உணர்கிறோம். இந்த படம் தந்த வெற்றி இன்னும் கொஞ்சம் கூடுதல் பொறுப்பை தருகிறது'' என்றார்.

நாயகி பார்வதி அருண் கூறுகையில், ‛‛ ‛காரி' படத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சி. மதுரை மக்களுடன் படம் பார்த்தது கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. அவர்கள் தந்த உற்சாகம் புல்லரிக்க வைத்தது'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.