சென்னை: திருமழிசை புதுநகர் திட்டத்தில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 17 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இதில் 12,000 அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. மேலும், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையம் அமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு 15 நிதிக்குழு மானியத்தில் புதிய நகரங்களை உருவாக்க தமிழகத்திற்கு ரூ.8,000 கோடி நிதி உதவி அளிக்கிறது. ஒரு நகரத்திற்கு ரூ.1000 கோடி என்ற அடிப்படையில் தமிழகத்தில் மொத்தம் 8 புதிய நகரங்கள் உருவாக்கப்படவுள்ளது. இதில் திருமழிசை, மீஞ்சூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் புதிய நகரங்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதில் திருமழிசை புதுநகர் திட்டத்தை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் தயார் செய்து வருகிறது. இந்தப் புதுநகர் திட்டத்தில் 17 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி செம்பரம்பாக்கம், குந்தம்பாக்கம், நரசிங்கபுரம், நசரத்பேட்டை உள்ளிட்ட 17 கிராமங்களை இணைந்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.