பீகார் மாநிலத்தில், நவாடா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு நபர் சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி ஐந்து வயது சிறுமியை அருகிலுள்ள கோழிப்பண்ணைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகச் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தி வெளியில் தெரியவந்ததும் உள்ளூர்வாசிகள் சிலர் அந்த நபரை பிடித்து, கிராம சபை முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினர். ஆனால் அங்கிருந்தவர்கள் அவர் செய்த குற்றத்தை பார்க்காமல், அந்த சிறுமியை ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்றது தவறு என்று கூறி அந்த நபரை ஐந்து தோப்புக்கரணம் போடுமாறு தீர்ப்பளித்துள்ளனர்.
அந்த நபரும் அதேபோன்று தோப்புக்கரணம் போட்டுள்ளார். இதை அங்கிருந்தவர்களில் யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த சிலர் `கிராமப்புற இந்தியாவில் ஆணாதிக்கம்’ என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோவுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதில் சிலர், முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரைக் குறிப்பிட்டு இந்த குற்றம் தண்டிக்கப்படாமல் இருக்க மாநில அரசு அனுமதிக்கப்போகிறதா? என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய போலீஸ் தலைமை காவலர் கவுரவ் மங்லா, “இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனை மறைக்க முயன்றவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல், குற்றம் சாட்டப்பட்டவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.