மதுரை மாவட்டத்தில் உள்ள மதிச்சியம் காவல் நிலையத்தில் ராமச்சந்திரன் என்பவர் போலீஸ் ஏட்டுவாக உள்ளார். இவர் இதற்கு முன்னதாக கூடல்புதூரில் போலீசாக இருந்த போது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தாலுகா, துத்திமேடை சேர்ந்த கணேஷ் என்பவரை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர்.
கடந்த 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, உமரப்பேட்டை காவல் நிலையத்தில் கணேஷ் மனைவியிடம் ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். அப்போது ராமச்சந்திரன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், இதற்கு சுவிதா மறுப்பு தெரிவித்து விட்டார். மறுநாள் கணேஷ் மனைவி சுவிதா மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரலேகா, உஷா உள்ளிட்டோரை ராமச்சந்திரன் மதுரைக்கு அழைத்து சென்று விட்டார்.
அதேபோல், கொள்ளையன் கணேசன், தந்தை துரைசாமி, நண்பர்கள் சீனிவாசன் மற்றும் ராஜாவும் மதுரைக்கு புறப்பட்டு வந்தார்கள். அவர்களிடம் ராமச்சந்திரன், மரியாதையாக ரூ.50 ஆயிரத்தை கொடுத்து விடு. இல்லையெனில் உன் மகனை குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால், அதற்கு துரைசாமி, என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ராமச்சந்திரன், அவர்களிடம் கூகுள்-பே மூலம் ரூ.15 ஆயிரம் பணத்தைப் பெற்றுள்ளார். அதன் பிறகு ராமச்சந்திரன் பல நேரங்களில், துரைசாமி குடும்பத்தினரிடம் இருந்து ரூ.72 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து சுவிதா, மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மதுரை மாநகர போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.