தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், பொதுத்தேர்வுகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட கூடிய அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் குறித்த அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, அகமதிப்பீட்டுக்கு மொத்தம் 10 மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது. அதில் வருகை பதிவுக்கு இரண்டு மதிப்பெண்களும், உள்நிலைத் தேர்வுகளுக்கு நான்கு மதிப்பெண்களும், செயல்திட்டம் மற்றும் களப்பயணம் ஆகியவற்றுக்கு இரண்டு மதிப்பெண்களும், கல்வி இணை செயல்பாடுகளுக்கு இரண்டு மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, தொழிற்கல்வி செய்முறை பாடத்துக்கான அகமதிப்பீட்டுக்கு 25 மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது. இதில் வருகைப்பதிவுக்கு ஐந்து மதிப்பெண்களும், உள்நிலைத் தேர்வுகளுக்கு பத்து மதிப்பெண்களும், செயல்திட்டம் மற்றும் களப்பயணத்துக்கு அதிகபட்சம் ஐந்து மதிப்பெண்களும், கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு ஐந்து மதிப்பெண்களும் வழங்கப்படும்.
மேலும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்களை வழங்கும்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அதேபோல், தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள் வழங்குவதை மிகக் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.