"ஒங்க வீட்டுல கோளாறு இருக்கு: தோஷம் கழிக்கணும்" – மோசடி சாமியாருக்கு விழுந்த தர்ம அடி!

தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்ணிடம் ஏமாற்றி வந்த போலி சாமியாருக்கு தர்ம அடி கொடுத்ததால் மத்தூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அடுத்த, நரவந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நளினி (45). இவர் நத்தம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த வருடம் நளினி வீடு வழியே சென்ற போலி சாமியார் ஒருவர் நளினியிடம் வீட்டில் செய்வினை செய்திருப்பதாகவும், அதன் காரணமாக தொடர்ந்து கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
image
இதில் ஏமார்ந்துபோன நளின், செய்வினை எடுக்க என்ன செய்ய வேண்டுமென கேட்டுள்ளார். செய்வினையை எடுக்க அமாவாசையன்று சுடுகாட்டில் பூஜை செய்ய வேண்டும், கோவிலில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும், உங்கள் குடும்பத்திற்காக சிறப்பு யாகம் செய்ய வேண்டும். ஆடு பலியிட வேண்டும் என பல வார்த்தைகள் கூறி கடந்த 6 மாதங்களாக சிறுகச் சிறுக ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் பெற்றுள்ளார்.
இதையடுத்து வீட்டில் கஷ்டம் தீராததால் சாமியாரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதுவரை குடும்பத்தாரிடம் மறைத்து வைத்திருந்த இச்சம்பவத்தை எடுத்துக் கூறியுள்ளார். நளினி. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஏமாற்றப்பட்டது உணர்ந்து வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மீண்டும் நளினியை தொடர்பு கொண்ட போலி சாமியார் சிறப்பு பூஜை ஒன்று செய்ய வேண்டும். அதற்காக ஆடு மற்றும் பூஜை சாமான்கள் வாங்க வேண்டும். அதற்காக உடனடியாக ரூபாய் பத்தாயிரத்தை எடுத்துக்கொண்டு மத்தூர் பேருந்து நிலையம் வரவேண்டுமென கூறியுள்ளார்.
image
இந்த தகவல் அறிந்த நளினியின் மகன் மற்றும் அவரின் நண்பர்கள் மத்தூரில் பணத்துக்காக காத்திருந்த போலி சாமியாரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் மத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலி சாமியாரை விசாரித்ததில் தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த, செங்குட்டை பகுதியைச் சேர்ந்த செல்வம் (47) என்பது தெரிய வந்தது.
கிராமத்தில் உள்ள பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பது இவரது வாடிக்கை என்றும், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனது சொந்த காரில் சென்று கிராமத்தின் வெளியே காரை நிறுத்திவிட்டு கிராமத்தினுள் நடந்து சென்று குடும்ப பெண்களிடம் தோஷம் இருப்பதாகக் கூறி நம்பவைத்து ஏமாற்றுவது இவரது வேலை என தெரிய வந்தது.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார், விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.