சென்னை : 27,538 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்றவை – அதிர்ச்சி அறிக்கை! 

சென்னையில் மட்டும் 27,538 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளதாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

மேலும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற வீடுகளை இடித்து விட்டு அதே பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தர உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னையில் மட்டும் 27,538 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற வீடுகளை இடித்து விட்டு அதே பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தரவேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

அதன் அடிப்படையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும், நடப்பாண்டு ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும் ஆக மொத்தம் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் 15,000 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அனைத்து குடியிருப்புகளும் 400 சதுர அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இதில்,10,000 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 27,538 வீடுகளும் இடிக்கப்பட்டு படிப்படியாக புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இன்று மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ஆன்டிமானிய தோட்டம், வன்னியபுரம், டாக்டர் தாமஸ் சாலை, கருமாங்குளம், காமராஜ் காலனி, லலிதாபுரம் ஆகிய திட்டப்பகுதிகளை அமைச்சர் அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.