பாஜ.வுக்கு இடம் கொடுக்காதீர்கள் மெகபூபா எச்சரிக்கை

ஸ்ரீ நகர்: ‘ஜம்மு காஷ்மீரில் இனிவரும் தேர்தல்களில் இளைஞர்கள் களமிறங்க வேண்டும். பாஜ.வுக்கு இடம் கொடுக்காதீர்கள்’ என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி நேற்று ஸ்ரீநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:
இந்தியா பாஜ.வுக்கு சொந்தமானதல்ல. அதற்கு சொந்தமாகவும் விட மாட்டோம். நாம் இணைந்திருக்கும் இந்தியாவானது ஜவகர்லால் நேரு, காந்திஜி, மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தால் இணைக்கப்பட்டது. இது இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் இந்தியா.  

மக்களின் கண்ணியம், அடையாளத்துடன் ஒன்றிய அரசு விளையாடி வருகிறது. பாஜ. ஒட்டு மொத்தத்தையும் அழித்து விட்டது. 1947ம் ஆண்டு இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் கொள்ளையர்களை போல் ஒன்றிய அரசு நடந்து கொள்கிறது. காஷ்மீர் மக்களால் அவர்கள் அடித்து விரட்டப்பட்டனர். இனிவரும் நகராட்சி, பஞ்சாயத்து, சட்டப்பேரவைத் தேர்தல்களில் இளைஞர்கள் களமிறங்க வேண்டும். பாஜ.வுக்கு இடம் கொடுக்காதீர்கள். இதுவே தங்களது உரிமைகளை பெறுவதற்கான ஆயுதம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.