21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானம் விற்பதை தடுப்பது எப்படி? – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானம் விற்பனை செய்வதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்னை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்கவும், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்கவும் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ”தென் மாநிலங்களில் தமிழகத்தில் தான் குறைந்த நேரம் டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்படுகிறது” என்றார். அதற்கு நீதிபதிகள், ”டாஸ்மாக் கடைகள் குறைந்த நேரம் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளது” என்றனர்.

அதற்கு அரசு வழக்கறிஞர், ”மதுபானங்களின் விலை அதிகமாக இருப்பதால் அதிகளவில் விற்பனை நடைபெறுவது போல் தெரிகிறது” என்றார். பின்னர் நீதிபதிகள், ”டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க ஏன் பரிசீலனை செய்யக்கூடாது?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வழக்கறிஞர், “கரோனா காலத்தில் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மது வாங்கி வருவது உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடைபெற்றதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. மதுப்பிரியர்கள் மாற்று வழிகளை யோசிக்கின்றனர். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

உடனே நீதிபதிகள், ”மாணவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லையா?” என கேள்வி எழுப்பினர். அரசு வழக்கறிஞர், ”இந்த விஷயத்தை அரசு தீவிரமாக கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

இதையடுத்து, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பதை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசுக்கு வந்துள்ள பரிந்துரைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 1-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.