பிரபல தமிழ் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் வழி பேரனான துஷ்யந்த், அவர் மனைவி அபிராமி ஆகியோர் இணைந்து ஈசன் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார்கள். இந்த நிறுவனம் மயிலாப்பூரில் இயங்கிவரும் தனபாக்கியம் என்ட்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு வைத்துள்ளது. இந்நிலையில், தனபாக்கியம் நிறுவனத்தின் பங்குதாரரான அக்ஷய் சரின் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “துஷ்யந்த், அவர் மனைவி அபிராமி ஆகியோர் நிர்வகிக்கும் நிறுவனத்துடன், எங்கள் நிறுவனம் வர்த்தக தொடர்பு வைத்திருந்தது. வியாபார காரணங்களுக்காகக் கடந்த 2019-ம் ஆண்டு துஷ்யந்த் தரப்பிலிருந்து எங்களுக்கு 15 லட்சம் ரூபாய்க்கான இரண்டு காசோலைகள் வழங்கப்பட்டன. ஆனால், வங்கியில் போதிய பணம் இல்லாத காரணத்தினால் அந்த இரண்டு காசோலைககளும் திரும்ப வந்துவிட்டன.
வங்கியில் பணம் இல்லை என்று தெரிந்தும் வேண்டுமென்றே எங்களுக்குக் காசோலை அளித்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக வக்கீல் நோட்டீஸ் அளித்தும் பதிலளிக்கவில்லை. எங்கள் பணமும் திரும்பக் கொடுக்கப்படவில்லை. எனவே, துஷ்யந்த், அவர் மனைவி அபிராமி மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதேபோல, பணத்துக்குப் பொறுப்பேற்பதாக துஷ்யந்த் தந்தை ராம்குமார் உத்தரவாதம் அளித்திருந்தார். அவர்மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த, சைதாப்பேட்டை நீதிமன்றம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பேரன் துஷ்யந்த், அவர் மனைவி அபிராமி ஆகியோருக்கு எதிராகப் பிணையில் வெளியில் வரக்கூடிய பிடிவாரன்ட்டைப் பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 14-ம் தேதிக்குத் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.