திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட எரவாஞ்சேரி அருகே உள்ள வடுககுடி பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன். இவர் மன்னார்குடி வனத்துறையில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் முகிலன்(20). கூலி வேலை செய்து வரும் முகிலன் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக அடிக்கடி தந்தை லட்சுமணனுடன் தகராறில் முகிலன் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு லட்சுமணனுக்கும் அவரது மகன் முகிலனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த முகிலன் தனது தந்தை லட்சுமணனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுள்ளார்.
அப்போது முகிலனின் தாத்தா ரேனையன் (75) என்பவர் வீட்டின் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். மகன் லட்சுமணனுக்கும் பேரன் முகிலனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதால் ரேனையன் எப்போதும் அருகில் உள்ள கோவிலில் படுத்து உறங்குவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகனுக்கும் பேரனுக்கும் நடந்த சண்டையினை சமாதானம் செய்வதற்காக ரேனையன் வந்ததுடன் பேரனிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகிலன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து தாத்தா மேல் ஊற்றி கொளுத்தியுள்ளார்.
ரேனையனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை அனுப்பி வைத்தனர். அங்கு 40 சதவீதம் தீக்காயத்துடன் ரேணையன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அறிந்து பேரளம் போலீசார் வழக்கு பதிவு செய்து முகிலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.