வெளியேற மறுத்த ஜெகன் மோகன் தங்கை; காரோடு இழுத்துச் சென்ற தெலங்கானா போலீஸ்! – என்ன நடந்தது?

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளாவை, அவர் அமர்ந்திருந்த காரோடு, போலீஸார் கிரேனில் இழுத்துச்சென்ற சம்பவம் அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தெலங்கானாவில் கடந்த ஆண்டு புதிய கட்சி தொடங்கிய ஷர்மிளா, முதல்வர் சந்திரசேகர ராவுக்கெதிராக மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுவருகிறார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா

இதில் நேற்றைய தினம் பாதயாத்திரையின்போது, பி.ஆர்.எஸ் கட்சியின் தொண்டர்களுக்கும், ஷர்மிளாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்காரணமாக, போலீஸார் ஷர்மிளாவை கைதுசெய்து பின்னர் விடுவித்தனர். இந்த நிலையில் இன்று காலை ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியினர், முதல்வர் சந்திரசேகர ராவின் அதிகாரபூர்வ இல்லமான பிரகதி பவன் நோக்கி பேரணி மேற்கொண்டனர். இந்தப் பேரணியில் ஷர்மிளாவும் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து பேரணியில் காரில் வந்துகொண்டிருந்த ஷர்மிளாவை கைதுசெய்ய போலீஸார் முயன்றிருக்கின்றனர். ஆனால், ஷர்மிளா காரிலிருந்து வெளியேற மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, ஷர்மிளா காருக்குள் அமர்ந்திருக்க… அந்தக் காரை போலீஸார் கிரேன் மூலம் கட்டி இழுத்துச் சென்றனர். இதில் காரின் கண்ணாடிகள் சேதமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்தச் சம்பவத்தின்போது அங்கு கூடியிருந்த ஷர்மிளாவின் ஆதரவாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.