ரவுடி பேபி சூர்யா ஆபாச பேச்சு: அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் – வழக்கு விசாரணை தள்ளிவைப்பு!

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தொடர்ந்த வழக்கில் தற்போதைய நிலையில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

ரவுடி பேபி என்றும், ரவுடி பேபி சூர்யா என்றும் அழைக்கப்படுகிற சுப்புலட்சுமி, ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுவந்தவர். கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனலை ஆபாசமாக விமர்சித்து ரவுடி பேபி சூர்யா பதிவிட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில், ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கந்தர்ஷா ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் கைதாகினர்.

பின்னர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

தன் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்க்ல் செய்யப்பட்டு இருந்தது. காழ்புணர்ச்சியோடு அளிக்கப்பட்ட புகாரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும், தனது கோரிக்கையை அறிவுரைக் கழகம் உரிய முறையில் பரீசிலிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி டீக்காரமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், ஆஜராகி பெண்களுக்கு எதிராக சுப்புலட்சுமி ஆபாசமாக பேசியுள்ளதாகவும், அந்த வீடியோக்களை பார்த்து நீதிபதிகள் முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். பின்னர் லேப்டாப் மூலம் நீதிபதிகளிடம் டிக்டாக் சூர்யாவின் காட்சிகளை காண்பித்தார்.

ஒரு சில காட்சிகளை மட்டுமே பார்த்த நீதிபதிகள், டிக்டாக் சூர்யாவின் பேச்சுகளை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வழக்கில் முகாந்திரம் உள்ளதாகவும், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.