கன்னியாகுமரி திருவள்ளூர் சிலை வெள்ளை நிறமாக மாறியுள்ளது..! ஏன் தெரியுமா ?

கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளன. திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலி சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ரசாயனக் கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தப்பணிகள் நடைபெறவில்லை. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து உயர் மட்ட குழுவினர் திருவள்ளுவர் சிலையை சென்று பார்வையிட்டனர்.பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.1 கோடி திட்ட மதிப்பில் ரசாயனக் கலவை பூசுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதையடுத்து ரசாயானக்கலவை பூசும்பணி கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி தொடங்கியது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் நேரில் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

முதல்கட்டமாக திருவள்ளுவர் சிலையில் சுண்ணாம்பு கலவை பூசப்பட்டது. தொடர்ந்து தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு காகித கூழ் பூசும் பணி தொடங்கியது. இதற்கிடையில் தொடர்ந்து மழை பெய்ததால் காகித கூழ் கரைந்து நாசமானது.இதைத் தொடர்ந்து மழையினால் காகித கூழ் பூசும்பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மழை ஓய்ந்ததை தொடர்ந்து தற்போது சிலையில் காகிதக்கூழ் பூசும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 15 நாட்கள் காகிதக்கூழ் பூசப்பட்டு மீண்டும் தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்படும்.இங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், காகிதக்கூழ் ஒட்டப்பட்டு உள்ளதால்,சிலை வெண்மை நிறமாக காட்சியளிக்கிறது. டிசம்பர் இறுதியில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ஜனவரி முதல் வாரத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.