திருவண்ணாமலை தீபத்திருவிழா: பக்தர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு..!

தீபத் திருநாள் அன்று காலை 6 மணி முதல், முதலில் வரும் 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் கூறியதாவது; “செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு, 2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.

இந்த அனுமதி சீட்டு, தீபத்திருவிழா அன்று காலை 6 மணிக்கு தொடங்கி முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக வழங்கப்படும். மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

பக்தர்கள், 06.12.2022 அன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதிக்கப் படுவார்கள். பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.

மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும்.

மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும் நெய்யை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.

மேற்கண்ட நிபந்தனைகளை தவறாமல் கடைப்பிடித்து, அருள்மிகு அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.