முடிவளர அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் ஒருவர் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஆதர் ரஷீத் (30) என்ற இளைஞர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு முடி உதிர்வு பிரச்னை அதிகமாக இருந்துள்ளது.
அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த இவர், பின்னர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி கடந்த ஆண்டு முடி மாற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையின் விளம்பரத்தை பார்த்த ரஷீத் அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இவருக்கு செப்சிஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் ஏற்பட்டது. இதனால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. நாளடைவில் காயங்கள் ஆறாமல் அழுகி அதிலுள்ள பாக்டீரியாக்கள் மூலம் நச்சுத்தன்மை உருவாகி அது ரத்தத்தில் கலந்துள்ளது.
இதில் அவரது சிறுநீரகம் செயலிழந்தது. தொடர்ந்து படிப்படியாக அவரது உடலில் இருந்த மற்ற உறுப்புகளும் செயலிழக்க தொடங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர் முடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை மீது புகார் அளித்தனர்.
அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் உயிரிழந்த ரஷீத்திற்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in