புதுடில்லி: ஜி 20 மாநாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் இன்று(டிச.,05) டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், முதல்வர் ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உலக பொருளாதாரத்தில், முதன்மை சிக்கல்களைத் தீர்க்க, வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக, ‘ஜி – 20’ அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஜி 20 நாடுகள்:
இந்த அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகிய, 20 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
தலைமை பொறுப்பு:
ஆண்டுதோறும் அமைப்பில் உள்ள நாடுகளில், ஏதேனும் ஒரு நாடு தலைமை பொறுப்பை ஏற்கும். அந்த வகையில், கடந்த ஆண்டு ஜி – 20 உச்சி மாநாடுக்கான தலைமை பொறுப்பு, இந்தோனேஷியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இம்மாதம் 1ம் தேதி தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது. ஓராண்டு இந்த பொறுப்பில் இந்தியா இருக்கும். அடுத்த ஆண்டு உச்சி மாநாடு, இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.
ஆலோசனை:
அத்துடன், நாடு முழுதும், 50 நகரங்களில், பல்வேறு துறைகளுடன் இணைந்து, ஜி – 20 அமைப்பு சார்பில் 200 கூட்டங்களை நடத்த இந்தியா திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு மார்ச் 6, 7ல், பீஹார் மாநிலம், பாட்னாவில், ஜி – 20 கூட்டம் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தையும், உச்சி மாநாடையும் சிறப்பாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், இன்று(டிச.,05) டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க, மாநில முதல்வர்கள் மற்றும் பார்லிமென்ட் எம்.பி.,க்கள் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தன.
பங்கேற்பு
:
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், முதல்வர் ஸ்டாலின், முதல்வர்கள் மம்தா, நவீன் பட்டாக், மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, ஜி.கே வாசன், தம்பித்துறை, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்