'தமிழகம் முழு ஆதரவை அளிக்கும்..!' – பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி!

“ஜி – 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், தமிழகம் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்,” என, ஜி – 20 ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், கனடா, ரஷ்யா, சவுதி அரேபியா, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 20 நாடுகள் அடங்கிய அமைப்பு ஜி – 20. இந்த அமைப்பின் உச்சி மாநாடு, கடந்த நவம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டின் முடிவில், ஜி – 20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு, இந்தயாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இதன்படி, அடுத்த ஓராண்டு இந்தியாவின் பல்வேறு நகரங்களில், ஜி – 20 மாநாட்டின் கூட்டங்களை நடத்த, மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம், தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

2023 – ஆம் ஆண்டுக்கான ஜி – 20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில் நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு முதற்கண் எனது பாராட்டுகள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டியுள்ளது. ஜி-20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

‘அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி’ ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்குத் தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன்.

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் ‘தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்’ என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை (SPV) உருவாக்கி உள்ளோம்.

உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவோம்!

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் வாய்ப்புக்காக நமது மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.