பொங்கல் பரிசு: ரேஷன் கடைகளில் ரூ.1,000 – குடும்ப அட்டைதாரர்கள் ஹேப்பி

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 1,000 ரூபாயை ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும்.

ஆனால், கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.

அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவின. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், ஆளும் திமுக அரசை கடுமையாக சாடின. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே, 2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக, 1,000 ரூபாயை தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்க உள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்தி பரவி வருகிறது.

இந்தத் தொகையை, வங்கிக் கணக்கில் வழங்கலாமா அல்லது ரேஷன் கடைகள் மூலமாக வழங்கலாமா என்பது குறித்து தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு அலைச்சலை போக்கும் பொருட்டு, ஆதார் அடையாள எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் பணத்தை நேரடியாக தமிழக அரசு செலுத்த இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இதற்காக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கை ஆதார் எண்ணை இணைக்கும் பணியும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகை 1,000 ரூபாயை நியாய விலைக் கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இந்தத் தொகையை சேர்த்து வழங்க கூட்டுறவுத் துறை திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 1,000 ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்பால், ரேஷன் கார்டுதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.