தெலுங்கில் மீண்டும் ஆரம்பமான டப்பிங் பட சர்ச்சை : ‛வாரிசு' தான் குறியா…!

'வாரிசு' படத்தைத் தெலுங்கில் 'வாரிசுடு' என்ற பெயரில் டப்பிங் செய்து நேரடிப் படங்களுக்கு இணையாக வெளியிடுவது குறித்த சர்ச்சை கடந்த சில வாரங்களாகவே இருந்து வருகிறது. தெலுங்கு, தமிழ்த் திரைப்பட சங்கங்கள் இது குறித்து பேசி தீர்த்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், விசாகப்பட்டிணம் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் மீண்டும் இந்த சர்ச்சையைக் கையில் எடுத்துள்ளது.

நேற்று அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்குப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சங்கம் விவாதித்துள்ளது. இம்மாதிரியான பண்டிகை நாட்களில் தெலுங்குப் படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தியேட்டர்காரர்களைக் கேட்டுக் கொள்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

'வாரிசு' படத்தைத் தயாரித்துள்ள தில் ராஜு, தெலுங்குத் திரையுலகத்தில் மிகப் பெரிய வினியோகஸ்தர், தியேட்டர் வட்டாரங்களில் அதிக நெருக்கம் உடையவர். பல மாதங்களுக்கு முன்பே அவர் 'வாரிசு' படத்தைத் தெலுங்கில் வெளியிடுவதற்காக ஒப்பந்தம் செய்துவிட்டாராம். அதனால், நேரடித் தெலுங்குப் படங்களுக்கு முக்கிய தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள்.

பிரச்சினை முடிந்ததாக சொல்லப்பட்ட நிலையில் மீண்டும் இந்த விவகாரம் ஆரம்பமாகியுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இதில் பல திருப்பங்கள் ஏற்படலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.