ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கோட்டையேந்தல் கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இதுவரை எந்தவித போக்குவரத்து வசதியும் இல்லாமல் பொதுமக்கள் தவித்துள்ளனர்.
இவர்கள் சாயல்குடி அல்லது இராமநாதபுரம் செல்ல வேண்டுமெனில் ஊரிலிருந்து 4 கிலோமீட்டர் சென்று அங்கிருந்து ராமநாதபுரம் சாயல்குடி சாலைக்கு சென்று பேருந்தில் செல்லும் நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் போக்குவரத்து வசதி வேண்டி நீண்ட நாள் கோரிக்கையை முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான ராஜா கண்ணப்பனிடம் தங்கள் கிராமத்திற்கு வழியாக ராமநாதபுரம் அல்லது சாயல்குடி சென்று வர பேருந்து வசதி ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன்படி சாயல்குடியில் இருந்து கோட்டையேந்தல் வழியாக வாலிநோக்கம் சென்று அதே வழியில் மீண்டும் செல்லும்படி புதிய வழித்தடம் தொடங்கப்பட்டது. இதனையொட்டி கோட்டையேந்தல் கிராம மக்கள் புதிதாக வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து சந்தனம், குங்குமம் வைத்து ஆரத்தி எடுத்தனர். மேலும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு சால்வை அனைத்து அணிவித்துள்ளனர்.