உருவானது மாண்டஸ்: தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? எப்போது கரையை கடக்கும்?

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருப்பெற்றது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கில் 640 கி.மீ தொலைவில் உள்ளது தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. நாளை நள்ளிரவு வாக்கில் புயல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 65 – 75 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் அதிகபட்ச வேகம் 85 கி.மீ ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்லது. இதையொட்டி புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகத்தில் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
image
இந்த புயல் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்; காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
நாளை (நவ 9) நள்ளிரவில் புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதால், நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதற்கிடையே இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டுமும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.