சபரிமலையில் வி.ஐ.பி. தரிசன முறை இல்லை என்பதை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை நடத்துவது தொடர்பாக என்ஹான்ஸ் ஏவியேசன் என்ற தனியார் நிறுவனம் இணையதளத்தில் ஒரு விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் ரூ.48 ஆயிரம் கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவையுடன். சன்னிதானத்தில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது, சபரிமலையில் இதுவரை வி.ஐ.பி. தரிசன முறை கிடையாது. மறைமுகமாக கோவில் நிர்வாகம் வி.ஐ.பி. தரிசனத்தை கொண்டு வருகிறதோ என்ற சந்தேகம் பக்தர்களுக்கு உருவானது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து வழக்கு விசாரணையின் போது தனியார் நிறுவனம் இணையதளத்தில் இருந்து விளம்பரத்தை நீக்கியதுடன் மன்னிப்பும் கோரியது.
இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனில்.கே.நரேந்திரன், பி.ஜி.அஜித்குமார் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், சபரிமலை, நிலக்கல்லில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தை மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான சேவைக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் மண்டல, மகரவிளக்கு காலங்களில் இதனை பயன்படுத்த வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளா காவல்துறை சட்டத்தின் படி சிறப்பு பாதுகாக்கப்பட்ட பகுதியாக நிலக்கல் உள்ளது என்பதை நீதிபதிகள் சுட்டிகாட்டியுள்ளனர். இது பெரியார் புலிகள் சரணாலயத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் தூரத்தில் உள்ளதால், சீசன் அல்லாத நாட்களில் வன விலங்குகளின் வாழ்விடமாகவும் விளங்குவதை நீதிமன்றம் நினைவுப்படுத்தியது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் அனைவரும் சாதாரண பக்தர்கள் தான் என்று கூறிய நீதிபதிகள், யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். வி.ஐ.பி. தரிசன முறை சபரிமலையில் இல்லை என்ற நடைமுறையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
newstm.in