FIFA World Cup Round Up 2022: இதய கருவியுடன் நெதர்லாந்து வீரர் டு அச்சத்தில் தவித்த நெய்மார் வரை!

மெஸ்ஸிக்கான சீக்ரெட் ப்ளான்:

உலகக்கோப்பையின் காலிறுதிச் சுற்று தொடங்கவிருக்கிறது. காலிறுதியில் அர்ஜெண்டினா அணியை நெதர்லாந்து எதிர்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில் நெதர்லாந்து அணியின் பயிற்சியாளரான லூயிஸ் வான் ஹால், “மெஸ்ஸி பயங்கர கிரியேட்டிவ்வான வீரர். அவர் தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார். ஆனால், அதெல்லாம் பந்து அவர்களிடம் இருக்கும் வரைதான். பந்து அவர்களிடம் இல்லையெனில் மெஸ்ஸி ஆட்டத்திலேயே இருக்கமாட்டார்” எனப் பேசியிருக்கிறார். மேலும், மெஸ்ஸிக்கான திட்டம் என்ன என்பதை இப்போது கூறமாட்டேன் எனப் பேசியிருக்கிறார்.

Messi

நம்பிக்கை நாயகன்:

நெதர்லாந்து அணியில் 32 வயதான பிளிண்ட் எனும் வீரர் ஆடி வருகிறார். ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் கூட நெதர்லாந்துக்காக கோல் அடித்திருந்தார். இவர் இதயக்கோளாறால் பாதிக்கப்பட்டவர். ஒரு முறை களத்திலேயே சுருண்டு விழுந்திருக்கிறார். கார்டியாக் அரஸ்ட்டுக்கான சமிக்ஞைகள் தெரியவே மருத்துவர்கள் இனி அவர் கால்பந்து ஆடவே கூடாதென கூறிவிட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு ICT எனும் இதயத்துடிப்பை அளவிடும் பிரத்யேக கருவி ஒன்றைப் பொருத்திக் கொண்டு ப்ளிண்ட் ஆட வந்துவிட்டார். அர்ஜெண்டினாவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியிலும் பிளிண்ட் களமிறங்குகிறார்.

Blind

ரொனால்டோவுக்கு நாங்க இருக்கோம்:

சுவிட்சர்லாந்துக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் போர்ச்சுக்கல் அணியின் கேப்டம் ரொனால்டோ சப் ஆக பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். இதில், ரொனால்டோ கொஞ்சம் அப்செட் என்பது போல தெரிகிறது. ஆனால், ரசிகர்கள் ரொனால்டோவிற்கு தெம்பூட்டும் வகையில் அவர் 73வது நிமிடத்தில் சப் ஆக உள்ளே வந்த போது மைதானத்தில் எழுந்த ஆராவாரத்தின் வீடியோ பதிவை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

Ronaldo

அச்சத்தில் தவித்த நெய்மார்:

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் கணுக்கால் காயம் காரணமாக க்ரூப் சுற்றில் இரண்டு போட்டிகளில் ஆடவில்லை. “நான் ரொம்பவே பயந்துவிட்டேன். இந்தக் காயத்தினால் இனி உலகக்கோப்பையில் ஆடவே முடியாதோ என நினைத்தேன். ஆனால், நல்ல வேளையாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஊக்கத்தால் மீண்டு வந்துவிட்டேன்” என நெய்மார் கூறியிருக்கிறார்.

எல்லா டீமும் ஒண்ணுதான்:

இந்த உலகக்கோப்பையின் குரூப் சுற்றுதான் உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிகச்சிறந்த குரூப் சுற்று என ஃபிபா அமைப்பின் தலைவர் இன்ஃபான்டினோ பேசியிருக்கிறார். மேலும், “பெரிய அணி… சிறிய அணி என்கிற பேச்சே இனி இல்லை. எல்லாருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. எல்லாரும் சமமாகச் சாதிக்கிறார்கள்” எனவும் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.