கரையை கடந்தது மாண்டஸ்… பேருந்து, ரயில் சேவைகள் தொடக்கம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறியது. அந்தப் புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டிருந்தது. புயலின் தீவிரம் அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்ததால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த வகையில் சென்னையில் பேருந்துகள், ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில் தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்து மாமல்லபுரத்தில் நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. புயலின் கண் பகுதி கரையை கடக்கும்போது பலத்த சூறாவளி காற்று வீசி கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தாலும் இன்றும், நாளையும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் புயல் கரையை கடந்த பிறகு நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியது. அதனை தொடர்ந்து அதிகாலை 3.30 மணிக்கு 37 இரவு நேர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் பின்னர், அதிகாலை 4 மணிக்கு மேல் வழக்கம் போல மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதேபோல்,  அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல் அடிப்படையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் , ரயில்களின் இயக்கம் தொடர்பாக சிக்னல் கோளாறு உள்ளிட்ட ஏதேனும் பழுது தென்படும் பட்சத்தில் ரயில்களை நிறுத்தவும் அல்லது மாற்று நேரத்தில் இயக்குவது குறித்தும் பரிசீலிக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை சென்னை ஏர்போர்ட் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும் , சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரையிலும் இரு மார்க்கங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் மற்றும் பரங்கி மலையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.