டிஆர்எஸ் இனி பிஆர்எஸ் தேர்தல் ஆணையம் ஒப்புதல்: புதிய கட்சிக் கொடி அறிமுகம்

திருமலை: புதிய தேசிய அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிஆர்எஸ் கட்சியின் கொடியை முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று வெளியிட்டார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் (கேசிஆர்) தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என்ற தேசிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.  தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) என்ற பெயரை பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என மாற்ற  தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது.  

இந்நிலையில், நேற்று தெலங்கானா பவனில் சந்திரசேகரராவ் முதலில் பிஆர்எஸ் கட்சி தொடக்க விழாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.  பின்னர், டிஆர்எஸ் கட்சியை போன்றே ரோஜா நிற கலர் கொடியில் மத்தியில் தெலங்கானா மாநில வரைபடத்திற்கு பதில் இந்திய வரைபடத்துடன் கூடிய கட்சி கொடியை அறிமுகம் செய்தார். பிறகு சுபமுகூர்த்தத்தின்படி மதியம் 1.20 மணிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கேசிஆர் கையெழுத்திட்டார்.  இதன் மூலம் பாரத ராஷ்டிர சமிதி கட்சி அமலுக்கு வந்தது. சந்திரசேகரராவ் கையெழுத்திட்ட கடிதம் அதிகார பூர்வமாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.