திருச்சி மாவட்டத்தில் தவறான உறவில் பிறந்த குழந்தையை புதரில் வீசிய கல்லூரி மாணவி போலீசார் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பகுதி அடுத்த தபோவனத்திற்கு எதிர்புறம் உள்ள புதர்பகுதியில் நேற்று இரவு குழந்தை அழும் சத்தம் கேட்டதை எடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்பொழுது அங்கு துணியால் மூடப்பட்ட நிலையில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இருந்துள்ளது. குழந்தையை மீட்ட பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து ஜியுபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து குழந்தையை யார் வீசி சென்றது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை புதரில் வீசி சென்றது தெரியவந்துள்ளது.
மேலும் திருமணத்திற்கு முன்னதாக தவறான உறவினால் குழந்தை பிறந்ததால் அதனை முதலில் விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரி மாணவியிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்த நிலையில், விசாரணைக்கும் பயந்து மாணவி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.