நிலவுக்கு ஏவப்பட்டது ஜப்பானின் லேண்டர் கருவி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கேப் கனாவரெல்-கிழக்காசிய நாடான ஜப்பானின் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ‘லேண்டர்’ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் ‘ரோவர்’ ஆகியவை நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று விண்ணில் ஏவப்பட்டன.

latest tamil news

நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த, ‘ஐ ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், லேண்டர் கருவியை தயாரித்தது. இந்த ஆய்வில் இணைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ‘ரோவர்’ கருவியை தயாரித்துள்ளது.

இந்த இரு கருவிகளும், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் வாயிலாக, அமெரிக்காவின் கேப் கனாவரெல் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் நேற்று ஏவப்பட்டன. எரிபொருள் சிக்கனம் கருதி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லேண்டர் கருவி, பூமியில் இருந்து 16 லட்சம் கி.மீ., துாரம் சென்று நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள ஐந்து மாதங்கள் எடுத்துக் கொள்ளும்.

latest tamil news

சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் சோதனை விண்கலம் ஐந்து நாட்களில் நிலவை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்சின் ரோவர் கருவிக்கு, துபாய் அரச குடும்பத்தின் பெயரான ரஷீத் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. 10 கிலோ எடையுள்ள இந்த ரோவர் கருவி நிலவில் இறங்கி, 10 நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

ஜப்பானின் லேண்டர் கருவியில் பொருத்தப்பட்டுள்ள ‘ரோபோ’வும் நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.