சென்னை: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. இவர் மீதும், இவரது மனைவி மணிமேகலை மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “அரசியல் காரணங்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் என் மீது அவதூறாக வழக்கு தொடரப்பட்டது. எனவே, என்னையும், எனது மனைவியையும் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (டிச.13) தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலையை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.