இந்தியாவில் உள்ளவர்கள் வெளிநாட்டில் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதற்காக ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து வெளிநாடுகளுக்கு சென்று அங்கு ஏமாற்றப்படுவது தொடர் கதையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், பல மக்கள் சுற்றுலா விசாவின் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள்.
இந்நிலையில் நேற்று திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 186 பேர் மலேசியா நாட்டில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏஜெண்டுகள் மூலமாக சுற்றுலா விசாவில் மலேசியா சென்று அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இதையறிந்த மலேசிய அரசு சுற்றுலா விசா மூலமாக இங்கு வேலைக்கு வரக்கூடாது என்று தெரிவித்து, அவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அவர்களுக்கு முறையாக சாப்பாடு வழங்காமலும், சரியான வசதிகள் செய்து கொடுக்காமலும், குடிப்பதற்கு கழிப்பிட நீரை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:- “ஏஜெண்டுகளை நம்பி யாரும் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம். அப்படி சென்றால் பணத்தை இழப்பதுடன் அவமானப்படுத்தப்படுவோம்.
நாங்கள் அனைவரும் ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் கொடுத்து மலேசியாவிற்கு சென்றோம். தற்போது அந்த பணத்தையும் இழந்து வேலையும் இழந்து பரிதவித்து வருகிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.