பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் குட் நியூஸ்!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட உள்ளதால், ரேஷன் கார்டுதாரர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும்.

ஆனால், கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.

அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவின. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், ஆளும் திமுக அரசை கடுமையாக சாடின. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே, 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதி வாய்ந்த அரிசி அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளதாக, கடந்த சில வாரங்களாகவே செய்தி பரவி வருகிறது.

இந்நிலையில், 1,000 ரூபாய் ரொக்கப் பணத்துடன், ஒரு சில மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரிசி, சர்க்கரை, ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்களுடன், 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரப்பூர்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.