'வாரிசு' படத்தை ரீலிஸ் செய்யவிடாத வாரிசுக்கு தான் நாளை பட்டாபிஷேகம்: முன்னாள் அமைச்சர் கிண்டல்!

சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் 3 கட்டங்களாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற நிலையில் இன்று 2வது கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏரளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ பேசும்போது, ‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வேம் என்று திமுகவினர் கூறினர். உண்மை தான்; இன்றைக்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். பஸ் கட்டணத்தினை மறைமுகமாக உயர்த்தியுள்ளனர். அதற்கு மக்கள் சபாஷ் போட வேண்டும், இது திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் இல்லை, திமுக ஆட்சிக்கு பாராட்டு கூட்டம்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மு.க.ஸ்டாலின் ஒன்றும் மனுநீதி சோழன் கிடையாது. நீதி தவறாத குடும்பம், மகனுக்கு, பேரனுக்கு, உங்கள் வீட்டு டிரைவருக்கு கூட பட்டாபிஷேகம் பண்ணுங்க. மக்கள் தான் பாவம், உங்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்துள்ளனர். திமுக மூத்த நிர்வாகிகள், திமுகவினர் புழுக்கத்தில் உள்ளனர்.

பதவி ஏற்ற பின்னர் தான் திமுகவில் வேடிக்கை உள்ளது. திமுகநிர்வாகிகள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக ஆட்சியில் நாங்கள் நன்றாக இருந்தோம் என்று கூறுகின்றனர்.

வாரிசு படத்தை ரீலிஸ் செய்யவிடாமல் தடுக்கும் வாரிசுக்கு தான் நாளை பட்டாபிஷேகம், அதிமுக ஆட்சியில் சுதந்திரமாக படம் எடுக்க முடியும், வெளியிட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு ரெட்ஜெயண்ட் ரீலிஸ் என்று வந்தால் தான் படத்தினை வெளியிடும் நிலை. சினிமாத் துறை ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் வந்துவிட்டது.

உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதும், திமுகவினர் பட்டாசு வெடிக்காவிட்டாலும் அதிமுகவினர் வெடிப்போம், உதயநிதியை செய்தி துறை அமைச்சராக்க வேண்டும், அதில் தான் சினிமா வருகிறது. மின்சாரம் கட்டணம் உயர்வு மட்டுமல்ல, மின்வெட்டும் அதிகரித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த இந்த திட்டங்களை நிறுத்துவோம் என்று கூறி இருந்தால் கெட்டிக்காரர்கள்.

அமைச்சர் கீதாஜீவனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதையே நாம் சொல்லி இருந்தால் வானத்திற்கும், பூமிக்கும் குதித்து இருப்பார்கள். ஆனால் அண்ணாமலை சொல்லியதால் ரெய்டு நடந்து விடும் என்ற பயத்தில் பதில் பேசவில்லை. தாலிக்கு தங்கம் திட்டத்தினை நிறுத்தியது போல சத்துணவு திட்டத்தினையும் திமுக அரசுநிறுத்த உள்ளது என்று கடம்பூர் ராஜு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.