100-வது நாளை நெருங்கும் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை: இசை கச்சேரியுடன் கோலாகலமாக கொண்டாட காங்கிரஸ் முடிவு

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பயணத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆளும்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் நடைபயணத்தை நடத்தி வருகிறார். இந்தநிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100-வது நாளை கூடுதல் சிறப்புடன் கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 100-வது நாளான வரும் 16-ம் தேதி ஜெய்ப்பூரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடகர் சுனிதி சவுஹான் தலைமையிலான இசைக் குழுவினர் இந்த இசை நிகழ்ச்சியை அளிக்க இருக்கின்றனர். இதனை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த 100-வது நாள் யாத்திரையில், இமாச்சலப் பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்கு, துணை முதல்-மந்திரி முகேஷ் அக்னிஹோத்ரி, காங்கிரஸ் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்திய ஒற்றுமை யாத்திரை மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருதாகத் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய மந்திரி நமோநாராயண் மீனா, இந்த யாத்திரையின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் பொய்களை ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற உள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை, வரும் 21-ம் தேதி அரியானாவிற்கு செல்ல இருக்கிறது. இந்த யாத்திரை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரில் நிறைவடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.